பிரபல இயக்குனர் சுதா கொங்கரா, மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் பிரபலமானவர். இந்த படம் இவருக்கு பிரமாண்ட வெற்றியை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தையும் இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அடுத்ததாக மீண்டும் சூர்யாவுடன் இணைந்து புறநானூறு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார் சுதா கொங்கரா. அதன்படி இந்த படமானது 1950இல் நடந்த இந்தி திணிப்பு மற்றும் அதற்கு எதிராக நடந்த போராட்டத்தை மையமாக வைத்து உருவாக இருந்தது. இந்த படம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியது. ஆனால் சுதா கொங்கராவிற்கும் சூர்யாவிற்கும் இடையில் ஒரு சில கருத்து வேறுபாடு இருப்பதாகவும் இந்த படம் கைவிடப்பட்டதாகவும் சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆகவே புறநானூறு திரைப்படத்தில் வேறு ஒரு ஹீரோ நடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. அதேசமயம் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் சிம்பு, சிவகார்த்திகேயன், விக்ரம் இவர்களில் யாரேனும் ஒருவர்தான் ஹீரோவாக நடிப்பார் என்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் தான் சுதா கொங்கரா, சிவகார்த்திகேயனை சந்தித்து அவரிடம் புதிய கதை ஒன்றை கூறியதாகவும் அதற்கு சிவகார்த்திகேயன் ஓகே சொல்லிவிட்டதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படம் ஆக்சன் படம் என்றும் இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.