கால்பந்து வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கால்பந்து வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் 45 வயதான சுப்பிரமணி. ரங்கம்பாளையத்தில் பத்திர எழுத்தராக உள்ளார். பள்ளி காலம் முதல் அதெலெடிக் விளையாட்டு வீரரான சுப்பிரமணி, கால்பந்து விளையாட்டில் உள்ளூர் அணியுடன் சேர்ந்து தமிழக அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
இதற்காக தினமும் காலையில் நண்பர்களுடன் கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். வழக்கம் போல் இன்று காலை சங்கு நகர் மைதானத்தில் கால்பந்து விளையாடி கொண்டிருந்த பத்திர எழுத்தர் சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து, உடன் இருந்தவர்கள் சுப்பிரமணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்பிரமணி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கால்பந்தாட்ட வீரரின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.