ஆவடியில் SBI ஏ.டி.எம்-ல் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த வடமாநில சிறுவன்.
சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம் -ல் மாலை நேரத்தில் பொதுமக்கள் பலர் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது பணம் வராமல் வங்கி கணக்கில் இருந்து மட்டும் பணம் எடுத்ததாக குறுந்தகவல் (SMS) மட்டும் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வங்கி புகார் எண்ணில் புகார் அளித்தனர்.
அப்பொழுது சந்தேகப்படும் படியான சிறுவன் ஒருவன் ஏ.டி.எம் மெஷினை போலி சாவியால் திறந்து பணம் எடுத்துக் கொண்டிருந்துள்ளான்.அதுமட்டுமின்றி கையில் சிப் போன்று வைத்திருந்ததை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அங்கிருந்த நபர் ஒருவர் வடமாநில சிறுவனை பணத்தோடு கையும் களவுமாக பிடித்து வைத்து உள்ளனர்.பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவனிடம் நடத்திய விசாரணையில்
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிவா/15 என தெரிந்தது. மாலை அப்பகுதியில் சுற்றி திரிந்த அந்த சிறுவன், ஏ.டி.எம்., மெஷினில் பணம் வெளியே வரும் பகுதியில் அட்டை வைத்து அடைத்துள்ளான்.
இதனால் பொதுமக்கள் எடுக்க வேண்டிய பணம் ஏ.டி.எம் மெஷின் உள்ளேயே விழுந்துள்ளது. பொதுமக்கள் வந்து சென்ற பின் சாவியால் ஏ.டி.எம். மெஷினை திறந்து பொதுமக்கள் பணத்தை திருடியது விசாரணையில் தெரிய வந்தது.
போலி சாவிகள்,10 க்கும் மேற்பட்ட போலி ATM அட்டைகள் வைத்திருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிறுவனை கைது செய்த ஆவடி டி6 போலீசார் அவனிடம் இருந்த ஒரு லட்சம் பணம்,10 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் சாவிகளை பறிமுதல் செய்தனர்.
பொதுமக்கள் அச்சிறுவனை சந்தேகித்து பிடித்ததால் பணம் பறிபோகாமல் தப்பியது குறிப்பிடத்தக்கது.