பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே அவர்கள் வகித்து வந்த துறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியுடன் 71 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் 30 பேர் கேபினட் அமைச்சர்கள், 36 பேர் இணை அமைச்சர்கள் மற்ற 5 பேர் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் ஆவர்.
கடும் விமர்சனங்களுக்கு பிறகு பதவியேற்ற 20 மணி நேரம் கடந்த பிறகு அவர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பணியாளர் நலன், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி துறைகள் பிரதமர் மோடி வசமே உள்ளன.
ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறையும், அமித்ஷாவுக்கு உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறையும் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதின் கட்கரிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த நெடுஞ்சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜே.பி.நட்டாவுக்கு 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சுகாதாரம், குடும்ப நலத்துறை இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேளாண் மற்றும் ஊராக வளர்ச்சித் துறை மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமனுக்கு நிதி மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறையும், ஜெய்சங்கருக்கு இரண்டாவது முறையாக வெளியுறவுத் துறையும், அஸ்வினி வைஷ்ணவுக்கு மீண்டும் ரயில்வே துறையும், பியூஸ் கோயலுக்கு தொழில் மட்டும் வர்த்தகமும், தர்மேந்திர பிரதானுக்கு மனிதவள மேம்பாட்டு துறையும், ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு தொலைத்தொடர்பு துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இணை அமைச்சரான எல்.முருகனுக்கு தகவல் ஒளிபரப்பு துறையோடு நாடாளுமன்ற விவகார துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகரும் இணை அமைச்சருமான சுரேஷ் கோபிக்கு சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக முக்கியத்துறைகள் அனைத்துமே பாஜக வாசமே உள்ளன. கூட்டணி கட்சிகளைப் பொறுத்தவரை குமாரசாமிக்கு கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி சேர்ந்த ராம் மோகன் நாயுடுவுக்கு விமான போக்குவரத்து துறையும், சந்திரசேகர் பெம்மசானிக்கு ஊரக வளர்ச்சி மற்றும் தொலை தொடர்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த லாலன் சிங்கிற்கு பஞ்சாயத்து ராஜ் துறையும், ராம்நாத் தாகூருக்கு வேளாண் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சித் தலைவர் ஜிதன்ராம் மாஞ்சிக்கு சிறு,குறி தொழில் மேம்பாட்டு துறையும், சிராக் பஸ்வானுக்கு உணவு பாதப்படுத்துதல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஷிண்டே தரப்பிலான சிவசேனா அணியை சேர்ந்த பிரதாப் ராவ் ஜாதவுக்கு ஆயுஷ் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.