அண்மையில் விபத்து இழப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் ,சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுபவர்கள் மீது மது வாசனை இருந்தால், அதன் அளவுகளை அறிக்கைகளில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பல வழக்குகளில் அந்த அளவுகள் பதிவு செய்யப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதன் காரணமாக விபத்து வழக்குகளில் காயமடைபவர்களுக்கு உரிய இழப்பீட்டை தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது என குறிப்பிட்டிருக்கிறார்.
ஆகவே, விபத்துக்களில் சிக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுபவர்களின் மீது மது வாசனை இருந்தால், அதன் அளவுகளை அறிக்கைகளில் பதிவு செய்வதை கட்டாயமாக்கி அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி, தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/defamation-case-filed-against-speaker-appavu/95106
அதன் அடிப்படையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி,தமிழக அரசின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர்,பொதுசுகாதராத்துறை இயக்குனர்,மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் தமிழகத்தில் சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மற்றும் முதலுதவிக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்து வரும்போது அவர்கள் மீது மது வாசனை இருந்தால்,மது அருந்தியிருந்தார்களா என்பதை கண்டறிய ரத்த மாதிரி பரிசோதனை செய்வதை கட்டாயமாக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.ரத்தத்தில் மதுவின் அளவை கண்டறிவது கட்டாயமாக பின்பற்றவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ரத்தத்தை பரிசோதிக்கும் வசதி இல்லாத மருத்துவமனைகளில் , ரத்தமாதிரியை எடுத்து அருகில் பரிசோதிக்கும் வசதி உள்ள மருத்துவமனைகளில் பரிசோதிக்கவேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரத்தமாதிரி எடுப்பது, பரிசோதனை செய்வது உள்ளிட்டவை தொடர்பாக மருத்துவனை ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்றும்,சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு என்பதால் ரத்த மாதிரி எடுக்கும்போது சம்மதம் தேவையா என்ற கேள்வியும் எழாது என்றும் அவர் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சுற்றறிக்கை விபத்து வழக்குகளில் இழப்பீடுகளை தீர்மானிக்க முடியாத நிலை இருப்பதாக ஐகோர்ட் கூறியிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.