ஆவடி பேருந்து நிலையம் அருகே சாலையில் திடீரென விரிசலுடன் கூடிய மேடு ஏற்பட்டதை கண்டு பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியில் தனியார் நிறுவனம் இல்லங்களுக்கு கேஸ் விநியோகம் செய்ய கேஸ் பைப் புதைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆவடி பூந்தமல்லி சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு கேஸ் பைப் புதைக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆவடி பேருந்து நிலையம் அருகே புதைக்கப்பட்டிருந்த கேஸ் பைப் கசிவின் காரணமாக சாலையில் திடீர் மேடு போன்ற பகுதி காணப்பட்டது. பெரும் அசம்பாவதங்களை தடுக்கும் விதமாக நெடுஞ்சாலை துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, ஆவடி ரோந்து காவல் பணியினர் சாலையில் தடுப்பு வேலிகளை அமைத்து வாகனங்களை வழி மாற்றி அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாடு அரசு உடனடியாக கம்பம் மருத்துவமனை புதிய கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் – சீமான்!
பின்பு தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனத்திற்கு தகவல் அளித்து இரவே சாலையை தோண்டி பைப்பிள் ஏற்பட்டிருந்த கசிவை சீர் செய்து சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நேற்று இரவு முதலே ஆவடி சுற்றுப்பகுதிகளில் லேசான மழைப்பொழிவு உள்ள காரணத்தினால் சாலை பணிகள் முழுவதுமாக நிறைவடையாமல் சாலையில் தடுப்பு வேலி போடப்பட்டு மழைக்குப் பின்பு சாலை சீரமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் சற்று போக்குவரத்து நெரிசலுடன் செல்லக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.