பாக்யா வார இதழ் ஆரம்பித்த போது. அதில் நான் அசோசியேட் எடிட்டர். தபாலில் வந்திருந்த சிறுகதைகளை தேர்வு செய்து கொண்டிருந்தேன். அதில் ‘குதிரை’ என்றொரு சிறுகதையின் எழுத்து நடை பிரமாதமாக இருந்தது. எழுதி இருந்தவர் சென்னையில் வசிக்கும் ரவிஷங்கர் என்ற ஒரு இளைஞர். உடனே ஆசிரியர் பாக்யராஜிடம் கொடுத்து படிக்க வைத்தேன். படித்து முடித்தவர், கார் அனுப்பி அந்த இளைஞரை அழைத்து வரச் செய்தார்.
சிறுகதை பற்றி பாராட்டிவிட்டு, தன்னிடம் உதவியாளராகவும் சேர்த்துக் கொண்டார். இது நம்ம ஆளு உட்பட சில படங்கள் வேலை செய்துவிட்டு, இயக்குனர் விக்ரமன் படங்களில் பணிபுரிந்தார், ரவிஷங்கர்.
சூர்யவம்சம் படத்தில் இடம்பெற்ற ‘ ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ என்ற பாடல் உட்பட சில பாடல்களையும் எழுதினார். பின்னர் இயக்குனராகி ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற படத்தை இயக்கியதோடு, அதில் எல்லா பாடல்களையும் எழுதி இருந்தார்.
அதில் ‘எங்கே அந்த வெண்ணிலா?’ என்ற பாடல் உட்பட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே வசித்தார். நண்பர்களின் தொடர்பையும் குறைத்துக் கொண்டார். நேற்று இரவு கே கே நகரில் உள்ள தன் அறையில் தூக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்டார் ரவிஷங்கர்.