ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரை உலகில் டாப் நடிகராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர் கடைசியாக தேவரா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது. மேலும் ஜூனியர் என்டிஆர் தமிழ் இயக்குனர்களான வெற்றிமாறன், நெல்சன் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர் கே.ஜி.எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தன்னுடைய 31வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதன்படி இந்த படத்திற்கு தற்காலிகமாக NTRNEEL (NTR 31) என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு டிராகன் என்று தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இப்படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ருக்மினி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் ஏற்கனவே தகவல் வெளியானது. அடுத்தது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் தற்போது படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதியிலிருந்து ஜூனியர் என்டிஆர் இப்படப்பிடிப்பில் இணைவார் என்பது தெரியவந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.