மனோஜ் பாரதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இருப்பினும் இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. எனவே இயக்குனராக மாறிவிடலாம் என்று முடிவில் சிகப்பு ரோஜாக்கள் 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார் மனோஜ். ஆனால் அதுவும் கைகூடி வரவில்லை. பின்னர் அன்னக்கொடி என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த மனோஜ் ஈஸ்வரன், மாநாடு, விருமன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். அடுத்தது மார்கழி திங்கள் எனும் திரைப்படத்தை இயக்கினார். இதன் பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மனோஜ் பாரதிராஜா நேற்று (மார்ச் 25) மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். 48 வயதில் இவர் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் தனது மகனை பெரிய நடிகர் அல்லது இயக்குனராக்கி விட வேண்டும் என்ற பாரதிராஜாவின் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. மனோஜ் பாரதிராஜாவும் பல கனவுகளுடன், நிறைவேறாத ஆசைகளுடன் மண்ணுலகை விட்டு மறைந்து சென்றார். இவருடைய உடல் தற்போது பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு பாரதிராஜா மற்றும் மனோஜின் மகள்கள் இறுதிச் சடங்குகளை செய்து மனோஜை கண்ணீருடன் வழி அனுப்பி வைத்தனர்.