மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்கும் போது தமிழகத்திலும் அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி மாற்றம் நிகழும் போது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க முதல்வர் முடிவெடுத்துள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல் பரவி வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. ஆறு கட்டத் தேர்தல் முடிந்து 7வது கட்டத் தேர்தல் ஜூன் 1 தேதி (நாளை) நடைபெறவுள்ளது. அதன்பின்னர் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருமா அல்லது இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் வெற்றி வாய்ப்பு குறித்து உளவுத்துறை மூலமாக தகவல்களை பெற்றுள்ள முதலமைச்சர் 40 தொகுதிகளும் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிந்துகொண்டார்.
வாக்கு எண்ணிக்கை முடிந்து ஒருவேளை இந்திய கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் இருந்தால் அதற்கான பணியில் முதலமைச்சர் ஈடுபடுவார். மத்திய அமைச்சரவையில் திமுகவிற்கு எத்தனை அமைச்சர்கள், எந்தெந்த இலாக்காகள் பெறப்படும் என்பதை முதல்வர் முடிவெடுப்பார். ஒருவேளை மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் வேகமாக நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின் :
நாடாளுமன்ற தேர்தல் தொடங்குவதற்கு முன்பே அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் சில உத்தரவுகளை முதலமைச்சர் வழங்கியிருந்தார். அந்த வகையில் சரியாக வேலை செய்யாத, உள்ளடி பார்த்த அமைச்சர்களுக்கு இலாக்கா மாற்றம் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்றும், சில அமைச்சர்களை பதவியை விட்டு நீக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் தமிழ்நாட்டில் அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களுக்கு வளர்ச்சிப் பணிகளை கவனிப்பதற்காக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை, தேனி, சேலம், கிருஷ்ணகிரி, திருவாரூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் இல்லை. அங்கே பொறுப்பு அமைச்சர்களே கவனித்து வருகின்றனர். அதில் சில மாவட்டங்களில் புதிய அமைச்சர்களை நியமிக்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று திமுக தலைமை உறுதிப்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சில அமைச்சர்கள் அலட்சியமாக நடந்துக் கொண்டதாக முதலமைச்சருக்கு உளவுத்துறை வாயிலாக தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில் சில அமைச்சர்களின் பதவி பறிப்போவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ஓரிரு அமைச்சர்களை தூக்கிவிட்டு அந்த இடத்தில் புதிய அமைச்சர்களை நியமிக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஆவடி நாசருக்கு மீண்டும் வாய்ப்பு?
ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாசர், முதல்வர் குடும்பத்திற்கு நெருக்கமானவர். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆவடி நாசர் பால் வளத்துறை அமைச்சரானார். இரண்டு ஆண்டுகளில் அவர் மீது நிறைய புகார்கள் குவிந்ததாலும், அவர் ஏதாவது ஒரு காரணத்திற்காக தினமும் விவாதிக்கப்படும் நபராக மாறியதாலும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் ஒருமுறை அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று முதல்வர் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு வனத்துறை ஒதுக்கப்படலாம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. திமுக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கிய வரலாறு கிடையாது. அப்படி நாசர் அமைச்சரானால் திமுக வரலாற்றில் புதிய நிகழ்வாக அமையும்..