
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிக்கு முதல்வர் பதவி என்ற ஒப்பந்தம் எதுவும் மகாயுதி கூட்டணியில் போடவில்லை என்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் அமைந்த மகாயுதி கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 132 இடங்களிலும், சிவசேனா (ஷிண்டே) 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 41 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க தயாராகி விட்டது. காங்கிரஸ் கட்சி தலைமையில் அமைந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 20 தொகுதிகளிலும் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெற்று படுதோல்வி அடைந்துள்ளது.
ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக தனித்து 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
ஒருங்கிணைந்த சிவசேனா கட்சியை உடைத்து ஷிண்டே தலைமையில் ஆட்சி என்றதும் பெருந்தன்மையுடன் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தவர் தேவேந்திர பட்னாவிஸ். மேலும் அப்போது உருவான பாஜக – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொண்டவர் தேவேந்திர பட்னாவிஸ். தற்போது தனிப்பெரும் கட்சியாக பாஜக 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 13 எம்எல்ஏக்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் கூட்டணி கட்சியின் ஆதரவு இல்லாமலேயே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதல்வராக ஆசைப்படுகிறார். இந்த மாபெரும் வெற்றிக்கு என்னுடைய ஆட்சியில் கொண்டு வந்த “லாட்கி பகின்” திட்டத்தின் மூலம் தகுதியான ஏழை பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டம்தான் இந்த தேர்தலில் “பெரிய கேம் சேஞ்சர்” . அதுதான் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிக்கு முதல்வர் பதவி என்ற ஒப்பந்தம் எதுவும் மகாயுதி கூட்டணியில் போடப்படவில்லை என்று ஷிண்டே கூறியுள்ளார்.
அதனால் முதல்வர் பதவிக்கான போட்டி தேவேந்திர பட்னாவிஸ்க்கும், ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே இருந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மேல்மட்ட தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.