400 அடி சாலையில் இளைஞர் ஒருவர் பலி
ஆவடி அருகே மர்மமான முறையில் சுமார் 28 வயதுடைய இளைஞர் 400 அடி சாலையில் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். இது கொலையா? விபத்தா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டூர் சிப்காட் பகுதியில் நேற்று நள்ளிரவு 2.00 மணி அளவில் அடையாளம் தெரியாத சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் 400 அடி சாலையில் இறந்து கிடந்தார்.
இதைப் பார்த்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து இந்த இளைஞர் யார்? எந்தப் பகுதியை சேர்ந்தவர், இவரை யாராவது அடித்து 400 அடி சாலையில் தூக்கி வீசப்பட்டனரா.? இல்லை வாகன விபத்தில் உயிரிழந்தாரா? என்று பல கோணங்களில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.