கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் அவசரக்கால தேவைகளுக்காக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ரூ.29 லட்சத்தில் ஆம்புலனஸ் ஒன்றினை சா.மு.நாசர் முன்னிலையில் ஆவடி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆவடி மாநகராட்சியில் 7 நகர்புற சுகாதார நிலையம் மற்றும் 14 நகர்புற நல்வாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் அவசரக்கால தேவைகளுக்கு ஆம்புலனஸ் வசதி இல்லாமல் ஆட்டோக்களில் சென்று வரும் அவல நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2022-ல் தனியார் கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று ஆவடி மாநகராட்சியில் மருத்துவ நிகழ்ச்சிக்கு வந்தபோது, ஆவடி மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க வேண்டுமென கோரிக்கை அவர்களிடம் வைக்கப்பட்டது.
அதன்படி தனியார் நிறுவன சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் முன்னிலையில் நேற்று காலை ஆவடி மாநகாட்சியிடம் ஆம்புலன்ஸ் வாகனத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் ஜி. உதயகுமார், மாநகர மேயர் ஷேக் அப்துல் ரஹ்மான், மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், மண்டல தலைவர் ராஜேந்திரன், ஜோதிலட்சுமி நாராயணபிரசாத், அமுதா பேபி சேகர், பகுதி செயலாளர் நாராயண பிரசாத், பொன் விஜயன், சத்யா ரவி, யுவராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.