ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள். அம்பத்தூரில் டீ கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.
டீ கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.
அம்பத்தூர் சோழபுரத்தை சேர்ந்தவர் கொடியரசு (40) .இவர் அம்பத்தூர் இரயில்வே கேட் அருகில் தான் நடத்தி வரும் டீ கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பழைய பரோடா பேங்க் ரோடு அருகே வந்த போது தனது பழைய நண்பர் நாகராஜ் அங்கு நின்று கொண்டிருந்தார். அந்த சமயம் சரவணன் (எ) கோட்டை சரவணன் என்பவர் முன்விரோதம் காரணமாக தனது ஆட்டோவை வேகமாக ஓட்டி வந்து தனது நண்பர் மீது மோதியதில் நண்பர் கீழே விழுந்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த கோட்டை சரவணன் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியால் கொடியரசுவை ஓட ஓட கொலைவெறியுடன் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளார். தாக்குதலில் அவருக்கு தலை கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கிருந்து சென்ற கோட்டை சரவணன் கொடியரசுவின் கடைக்கு சென்று பணியாளர்கள் சீனுவாசன் மற்றும் சிவராஜையும் தாக்கி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். விசாரணையில் கொடியரசு கோட்டை சரவணன் மீது புகார் அளித்து சிறைக்கு அனுப்பி உள்ளார். இதனால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்ற முன்விரோத எண்ணத்தில் கொடியரசு மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அம்பத்தூர் அருகே பாழடைந்த இடத்தில் கோட்டை சரவணன் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று பிடிக்க முயன்ற போது தப்பி ஓடி பள்ளதில் விழுந்ததில் கோட்டை சரவணனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்து மாவு கட்டு போடப்பட்ட நிலையில் கைது செய்து அம்பத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கோட்டை சரவணன் டீ கடை உரிமையாளர் கொடியரசுவை ஓட ஓட விரட்டி வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பரபரப்பாக இயங்கும் அம்பத்தூரின் பிரதான சாலையில் டீ கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.