ஆவடி அருகே கொசுவத்தியால் தீப்பற்றி எரிந்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு புதிய அண்ணா நகர் நேரு தெருவை சேர்ந்தவர் முருகேசன். மாற்றுத்திறனாளியான இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு தனது மூன்று சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து உறங்கச் சென்றார்.
அவர் வசிக்கும் அந்தப் பகுதியில் கொசு தொல்லை அதிகம் இருப்பதால் கொசுவத்தி ஏற்றி அவரது படுக்கை கட்டில் அருகே வைத்துவிட்டு இரவு தூங்கிவிடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்நிலையில் நள்ளிரவில் திடீரென்று அருகில் வைக்கப்பட்டிருந்த கொசுவத்தி அவர் படுக்கை கட்டிலில் பட்டு தீ பரவியதில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு, வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டுள்ளார்.
உடனே அவரது வீட்டின் அருகிலிருந்த அவரது அண்ணன் ஓடி வந்து பார்க்கையில் அவரது அறை முழுவதும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து உள்ளே சென்று பார்க்கும் பொழுது மாற்றுத்திறனாளியான முருகேசன் படுக்கையிலிருந்து எழுந்து வெளியில் ஓட முடியாமல் தீயில் மாட்டிக் கொண்டு தீக்காயம் ஏற்பட்டு துடித்து கொண்டிருந்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு முருகேசனை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்தில் அவர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.