ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்ட மூவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை, எண்ணூர், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் (45) இவர் அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏரையூரில் உள்ள வீட்டை விற்றக, அதே ஊரைச் சேர்ந்த ஜான் ரோசாரியோ, மரியா சூசை மற்றும் விழுப்புரம் மாவட்டம் கல்பட்டை சேர்ந்த தனசேகர் மூலமாக கடந்த வருடம், 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார்.
அந்த பணத்தை கிரிட்டோ கணக்கிலிருந்து எடுக்க இயலாத காரணத்தால், தன்னை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய கூறிய நபர்கள் ஜான் ரோசாரியோ மற்றும் மரிய சூசை ஆகியோரிடம் கேட்டபோது, இருவரும் கொளஞ்சியப்பனை மிரட்டியுள்ளனர். எனவே, தான் இழந்த பணத்தை மீட்டு தருமாறு, கடந்த வாரம் ஆவடி காவல் ஆணையரகத்தில் இணைய வழியாக குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
அதன் பேரில், காவல் துணை ஆணையர் பெருமாள் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் ஜான் ரோசரியோ, மரியசூசை மற்றும் தனசேகரன் ஆகியோர், வெளிநாட்டு நபர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கரன்சியில் முதலீடு செய்ய அப்பாவி பொது மக்களை ஈர்க்கும் வகையில், குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறி முதலீடு செய்ய வைத்தனர்.
பின்னர், கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்ததாக கூறி, ஏற்கனவே முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற, மீண்டும் முதலீடு செய்ய அறிவுறுத்தியுள்ளனர். மேலும், முதலீடு செய்த நபர்களின் கணக்கிற்கான ஓ.டி.பி எண்களை தங்களது இமெயில் மற்றும் கைபேசிக்கு வரும் வகையில் மோசடி செய்து அப்பாவி பொது மக்களை ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்த குற்றப்பிரிவு போலீசார், மோசடி திட்டத்திற்கு பயன்படுத்திய லேப்டாப்கள் ஐ போன்கள் ஆகியவை கைப்பற்றினர்.
குற்றவாளி ஜான்ரோசாரியோ, மரியசூசை மற்றும் தனசேகரன் ஆகியோர் ஆவடி காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் இணைய வழி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே போல், இவரை போல், யாரேனும் ஏமாற்றப்பட்டிருந்தால் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்குமாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.