சென்னை அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த வடமாநில வாலிபர் கைது… அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பரிமுதல்.
போதையில்லா தமிழகம் என்ற இலக்கின் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆணைப்படி பல்வேறு போதைப் பொருட்கள் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து இரவு நேர மாரத்தான் போட்டி மற்றும் ஞாயிற்றுகிழமை திருவிழா என்று பல்வேறு நிகழ்ச்சிகள் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்கள் போலீசாருக்கு கிடைத்து வருகிறது.
அதன் அடிபடையில் அம்பத்தூர் மாதனங்குப்பம், எஸ்டேட் ஆகிய இடங்களில் மாணவர்கள் மத்தியிலும், வடமாநிலத்தவர்களிடமும் கஞ்சா விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் ஜி.கார்த்திக்கிற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ரகசிய சோதனையில் ஈடுப்பட்டனர்.
சோதனையின் போது மாதனங்குப்பம் ரோடு பார்க் அருகில் வடமாநிலத்தை சேர்ந்த ஐசக் நியூம் என்ற இளைஞர் கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்தார். அவரை பிடித்து கைது செய்த போலீசார் 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர் ஐசக் நியூம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.