சென்னை அம்பத்தூர் அடுத்த கதிர்வேட்டில் வாசனை திரவியங்கள் பேக்கிங் செய்யும் குடோனில் பயங்கர தீ விபத்து.
சென்னை அடுத்த அம்பத்தூரில் உள்ள கதிர்வேடு விநாயகர் கோயில் தெருவில் வாசனை திரவியங்கள் விற்பனை செய்யும் ஓகே ஏஜென்சி ( OK Agency) என்ற நிறுவனம் இயங்கி வருகிறது.
தீ பற்றி எரிந்த கட்டிடத்தில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் ஓகே ஏஜென்சியின் அலுவலகமும், இரண்டாம் தளத்தில் அதன் குடோனும் செயல்பட்டு வந்துள்ளது. குடோனில் வாசனை திரவியம், பேக்கிங் அட்டை பொருட்கள் மற்றும் பாலிதீன் பொருட்களை சேமித்து வைத்துள்ளனர்.
இரண்டாம் தளத்தில் உள்ள குடோனில் மளமளவென தீ பிடித்து எரிந்துள்ளது. விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த அம்பத்தூர், கொளத்தூர் மற்றும் மாதவரம் தீயணைப்பு மீட்பு குழுவினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர்.
இந்த சம்பவம் காலை 8 மணிக்கு நடந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.