கோடையில் ஆவின் ஐஸ்கிரீம் பொருட்கள் எளிதில் கிடைக்கவும் – மகளிருக்கு வேலைவாய்ப்பு பெருகவும் ரூ.40லட்சம் மதிப்பில், நடமாடும் பேட்டரி வண்டிகளின் மூலமான ஐஸ்கிரீம்
இல்லம் தேடி ஆவின் திட்டத்தின் மூலம் நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகனத்தின் செயல்பாட்டை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
கோடை காலத்தையொட்டி ஆவின் நிறுவனம் சார்பில் இல்லம் தேடி ஆவின் திட்டத்தின் மூலம், நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ஆவின் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக 32 பேட்டரி வாகனங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் அத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மொத்தம் 40 லட்சம் ரூபாய் செலவில் சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் பேட்டரி ஐஸ்கிரீம் விற்பனை வாகனங்கள் பெண்களுக்கு இன்றைய தினம் வழங்கப்பட்டன.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரைகள், வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலா தலங்கள் ஆகிய இடங்களிலும் ஆவின் ஐஸ்கிரீம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.