அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நீதிமன்ற அலுவலர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு. ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர் மற்றும் புகார்தார்களிடம் வட்டாட்சியர் மேற்கொண்ட பேச்சுவார்த்தை அடுத்து இரண்டு வாரம் அவகாசம் வழங்கி சென்றுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் ஊராட்சியில் கடந்த 1986 ஆம் ஆண்டு துளசி பாய் என்பவருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்டது. ஆனால் நில உரிமையாளரான துளசி பாய் அவர்களுக்கு குறைந்த அளவே இழப்பீடு தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து துளசிபாய் மற்றும் அவரது வகையறாக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதில் உரிய இழ்ப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவுவிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த கோரி அம்பத்தூர் சார்பு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர் மனு அளித்திருந்தார். இந்த விசாரணைக்கு நேரில் அம்பத்தூர் வட்டாட்சியர் ஆஜராகாத நிலையில் அம்பத்தூர் நீதிமன்றத்தில் இருந்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அம்பத்தூர் நீதிமன்ற அலுவலர்கள் அலுவல் நேரத்தில் வட்டாட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் வட்டாட்சியர் மணவாளன் 1 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியதில் இரண்டு வாரம் அவகாசம் கேட்டுள்ளார். இதனையடுத்து வழங்கப்பட்ட ஜப்தி ஆணைக்கு இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க பட்சத்தில் வட்டாச்சியர் அலுவலகம் ஜப்தி செய்யப்படும் என தெரிவித்து சென்றுள்ளனர்.