சென்னை மாநகரில் இன்று மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இந்நிலையில், மாலையில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்துகொண்டு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கோயம்பேடு, கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், கே.கே.நகர், அசோக் நகர், வேளச்சேரி, அடையாறு, தேனாம்பேட்டை, எழும்புர், பாரிமுனை, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதேபோல், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே சில மணி நேரங்களில் சென்னை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை அறிவித்துள்ளது,