சென்னை நொச்சிக்குப்பத்தில் 15 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்திலான மீன் மார்க்கெட் ஜூன் இரண்டாவது வாரத்தில் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2.25 கி.மீ., தூர மெரினா லுாப் சாலையை மாநகராட்சி மேம்படுத்தி வருகிறது. இந்த சாலையில் பட்டினப்பாக்கம் லுாப் சாலை வியாபாரிகளுக்காக, நொச்சிக்குப்பம் பகுதியில் நவீன முறையில் மீன் அங்காடி அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெறப்பட்டது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் “நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள, மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்திலான மீன் அங்காடி அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு 15 கோடி ரூபாய் செலவில், 366 கடைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு கடையும், 6.5 அடி நீளமும் 4.9 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். மேலும், 60 இருசக்கர வாகனங்கள் 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மீன்கள் விற்பனை செய்வதற்கும் மற்றும் மீன்களை வெட்டி சுத்தம் செய்தவற்கும் என தனித் தனியாக இடங்கள் உள்ளன. மீன்களைப் பதப்படுத்தி வைப்பதற்கான வசதி, கழிவுகளை சுத்திகரிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு ஜீன் இரண்டவது வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீன் பிடி தடை முடிந்து இங்கு மீன் விற்பனை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கிறது. இங்கு மீன் விற்பனை செய்ய மாட்டோம் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.