கடும் மனஉளைச்சலால் பெற்ற மகனை தாயே அடித்துக்கொன்ற சோகம்
மதுரவாயலில் இரும்பு ராடால் தாக்கி மகன் படுகொலை, செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் மன உளைச்சல் காரணமாக தாயே அடித்து கொன்றது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மதுரவாயல் அடுத்த புளியம்பேடு பகுதியை சேர்ந்தவர் அரி (வயது 45) தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 38), இவர்களது மகன் பூவரசன் (வயது 23), ராமபுரத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார். நேற்று முன்தினம் இவர்கள் வீட்டில் இருந்து யாரும் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தாய், மகன் இருவரும் தலையில் இரும்பு ராடால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிகிடந்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கி டந்த இருவரையும் மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பூவரசன் நேற்று முன்தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பூவரசன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூவரசன் தாயாரிடம் விசாரித்தனர். அதில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்த செல்வி, மகன் பூவரசனை இரும்பு ராடால் அடித்து கொலை, செய்துவிட்டு தன்னை தானே தாக்கி கொண்டது தெரிய வந்தது.
கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த செல்வி, இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கூறப்படுகிறது. கடந்த நாட்களாக தூக்கம் வராமல் அவதிப்பட்ட செல்வி, தினமும் இதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இரவு அரி வேலைக்கு சென்றுவிட்டார். அப்பொழுது தூக்கம் வராமல் இருந்த செல்வி அருகில் தூங்கி கொண்டிருந்த தனது மகனை ராடால் தாக்கியுள்ளார். பின்னர் தன்னை தானே தலையில் தாக்கி மயங்கி விழுந்ததும் தெரிய வந்தது.
படுகாயமடைந்த செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். மன உளைச்சல் காரணமாக இரும்பு ராடால் தாக்கி படுகொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.