கடந்த சில தினங்களாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல்வாதிகள் இச்சம்பவத்தை கண்டித்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருவதோடு போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவிக்கு கடந்த திங்கள் தினத்தன்று பாலியல் வன்கொடுமை… பாதுகாப்பு வேண்டி மாணவர்கள் போராட்டம்… உடனே அனைவரும் சொல்லும் கருத்து ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது’. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இது யார் குற்றம்? கல்வி பயில செல்லும் இடத்தில் காதலியுங்கள் என்று பெற்றோர்கள் சொல்லி அனுப்புகிறார்களா? காதலுடன் மறைவிடம் செல்லுங்கள் என கல்லூரி நிர்வாகம் சொல்லுகிறதா? வீடியோ பதிவை வீட்டிற்கு அனுப்புவேன். நெட்டில் விடுவேன் என்று அந்த காமுகன் மிரட்டினால், விட்டால் விடுடா என்ற செருப்பால் அடித்திருக்க வேண்டும். அவனை மட்டும் இல்லை. தப்பி ஓடிய அந்தக் காதலனையும் தான்.
ஒவ்வொருவருக்கும் ஒரு கான்ஸ்டபிள் போட்டா பாதுகாப்பு கொடுக்க முடியும்? பெண்ணைப் பெற்ற தகப்பன் என்ற முறையில் சொல்கிறேன். மொத்தத்தில் அனைவரும் முக்கியமாக பெண் குழந்தைகள் தற்காப்பு கலை கற்க வேண்டியது அவசியம். தும்பை விட்டு வாலை பிடிப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தவிர குற்றங்கள் குறையப்போவதில்லை. இதில் அரசை குறை கூறுவது நியாயமே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை குறை கூறுவது நியாயமே இல்லை…. அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து எம்.எஸ். பாஸ்கர்!
-
- Advertisement -