சினிமா வாய்ப்பு தருவதாக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் சித்திக்கை கைது செய்ய விதித்த தடையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்தது உச்சநீதிமன்றம்.
கடந்த 2016ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் அறையில் தனக்கு திரைப்பட வாய்ப்பு தருவதாக கூறி மலையாள நடிகர் சித்திக் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த தகவல் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடிகர் சித்திக், முன் ஜாமின் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அப்போது உச்ச நீதிமன்றம், நடிகர் சித்திக்கை இடைக்காலமாக கைது செய்யக்கூடாது என தடை விதித்திருந்தது. இந்த வழக்கம் வேண்டும் இன்று (அக்டோபர் 22) விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், 8 ஆண்டுகளுக்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கேரளா அரசு வழக்கறிஞர், “2019-ல் ஹேமா கமிட்டி அறிக்கை வந்தது. உயர்நீதிமன்றம் தலையிட்ட பின்னரே அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பல பெண்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். ஆகையினால். 30 எஃப். ஐ .ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சித்திக், தன்னால் எதையும் நினைவு படுத்த முடியவில்லை என கூறுகிறார். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவர் ஆதாரங்களை அழிக்க முற்படுகிறார்” என குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சித்திக் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.கிரி அவகாசம் கோரினார், அதனையேற்ற நீதிபதிகள், வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர். அதே நேரத்தில் சித்திக் மீதான கைது நடவடிக்கை மேற்கொள்ள விதித்த தடையையும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.