நடிகை ராதிகா தனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் 1980 காலகட்டங்களில் இருந்து தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கியவர். அந்த வகையில் இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த அளவிற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக நடித்து திரைத்துறையில் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராகவே வலம் வந்தார் ராதிகா. இதற்கிடையில் இவர் அண்ணாமலை, சித்தி, செல்வி, அரசி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்தவர். இவர் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு உடல் நலக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தகவல் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
அதாவது உடல் எடை காரணமாக ஏற்பட்ட முழங்கால் வலியால் மிகவும் அவதிப்பட்டதாகவும், அந்த வலியுடன் தான் படப்பிடிப்பு வேலைகளை பார்த்ததாகவும், தன்னுடைய தங்கமான கணவர் சரத்குமார் மற்றும் தன்னுடைய குடும்பம் தான் எனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த மகளிர் தினத்தன்று (மார்ச் 8) ராதிகா வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவர் தற்போது நலமுடன் இருக்கும் தகவல் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது.