பிரபல நடிகை சோனா ஃபெப்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
பிரபல நடிகை சோனா தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ரசிகர்களால் அறியப்பட்டவர். அந்த வகையில் இவர், கடந்த 2001 இல் வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஷாஜகான், மிருகம், சிவப்பதிகாரம், குசேலன், அழகர் மலை என பல படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வந்த சோனா சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். கடைசியாக இவர் தமிழில் யோகி பாபு நடிப்பில் வெளியான பூமர் அங்கிள் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் தான் இவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘ஸ்மோக்’ என்ற வெப் தொடரை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த வெப் தொடரை தான் இயக்கக் கூடாது, வெளியிடக் கூடாது என தன்னை சிலர் மிரட்டி வருவதாக தெரிவித்து இருந்த சோனா தற்போது ஃபெப்சி (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் – Film Employees Federation of South India) அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய சோனா, “என்னிடம் மேனேஜராக பணிபுரிந்த சங்கர் என்பவர் ரூ. 8 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி ஃபெப்சியிடம் முறையிட்டிருந்தேன்.
ஆனால் இதுவரை அவர்கள் உதவ முன் வரவில்லை. அதே சமயம் நான் எடுத்த பயோபிக் படத்தின் ஹார்ட் டிஸ்கை வைத்துக்கொண்டு என்னிடம் தர மறுக்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனக்கு என் ஹார்ட் டிஸ்க் வேண்டும். என்னுடைய பணம் வேண்டும். அதுவரை எத்தனை நாட்களானாலும் தினமும் வந்து போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.