தமிழ் சினிமாவில் ஆதிக் ரவிச்சந்திரன், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் சிம்பு நடிப்பில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பிரபுதேவா நடிப்பில் பஹீரா ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் , விஷால், எஸ்.ஜே. சூர்யா கூட்டணியில் இயக்கியிருந்த மார்க் ஆண்டனி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் இன்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதாவது நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை, ஆதிக் ரவிச்சந்திரன் மணமுடித்துள்ளார். எனவே சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தன்னுடைய மாமனார் குறித்து பேசி உள்ளார் ஆதிக். அதன்படி அவர் கூறியதாவது, “பிரபு சார் மிகவும் அமைதியானவர். அவர் அப்பாவி. அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவரிடம் இருக்கும் அப்பாவித்தனம் வேறு யாரிடமும் இருக்காது. என்னை அவருடைய மகன் போல் பார்த்துக் கொள்கிறார். குட் பேட் அக்லி படத்தில் அவர் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.