வேட்டையன் படத்தை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குனர் டிஜே ஞானவேல் ஆரம்பத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான கூட்டத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். இருப்பினும் ஜெய் பீம் திரைப்படம் தான் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதன்படி டிஜே ஞானவேல், ரஜினியுடன் கைகோர்த்து வேட்டையன் எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்க உள்ள புதிய படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே டிஜே ஞானவேல் பாலிவுட்டில் தோசா கிங் எனும் திரைப்படத்தை இயக்கப் போகிறார் எனவும் இந்த புதிய படத்தினை ஜங்கிலி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் தொடர்ந்து பல தகவல்கள் பரவி வந்தன. அதன்படி இப்படமானது கொலைக் குற்றச்சாட்டின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் நிறுவனர் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கிறது. பான் இந்திய அளவில் தயாராக இருக்கும் இந்த படத்தின் ப்ரீ ப்ரோடுக்ஷன் பணிகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.