மதராஸி படத்தின் கதையை வேறொரு நடிகருக்கு சொன்னதாக ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். அந்த வகையில் இவரது இயக்கத்தின் வெளியான தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. அடுத்ததாக இவரது இயக்கத்தில் சிக்கந்தர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மதராஸி படத்தின் கதையை முதலில் வேறொரு நடிகருக்கு சொன்னதாக ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது ஏ.ஆர். முருகதாஸ் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஷாருக்கானிடம் மதராஸி படம் தொடர்பான ஐடியாவை சொன்னாராம். முழு கதையையும் சொல்லவில்லையாம்.
இருப்பினும் ஷாருக்கான் இதற்கு ஓகே சொல்லிவிட்டு, இந்த கதையை விரிவுபடுத்தி வருமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனால் அதன் பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் இதைப் பற்றி அவரிடம் பேசியபோது ஷாருக்கானிடம் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை என்பதனால் அந்த கதையை விரிவுபடுத்தி சிவகார்த்திகேயனிடம் சொன்னதாக கூறியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். மேலும், “மான் கராத்தே, டான் போன்ற படங்களில் சிவகார்த்திகேயன் நன்றாக நடித்திருந்தார். அவருடன் பணியாற்றுவது அருமையான அனுபவம்” என்று தெரிவித்துள்ளார்.