இயக்குனர் அட்லீயின் புதிய படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் அட்லீ கடந்த 2013 ஆம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா ஆகியோரின் நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். அதன் பின்னர் பாலிவுட்டில் நுழைந்து ஷாருகானை வைத்து ஜவான் படத்தை இயக்கி பிரம்மாண்ட வெற்றி கண்டார் அட்லீ. எனவே இதைத்தொடர்ந்து இவர் என்ன படம் இயக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இயக்குனர் அட்லீ ஜவான் படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் அந்த திட்டத்தில் அல்லு அர்ஜுனுக்கு பதிலாக சல்மான் கான் தான் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியானது. அதன்படி அட்லீ இயக்க இருக்கும் 6வது படத்தில் சல்மான் கான் உடன் இணைந்து ரஜினி அல்லது கமல் நடிப்பார்கள் என தகவல் வெளியானது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் அட்லீ தரப்பில் இது உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் அட்லீயின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் தான் நடிக்கப் போகிறார் என்றும் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் சாய் அபியங்கர் இசையமைக்க உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படமானது சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகப் போகிறது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.