இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி , புற்றுநோய் காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய முன் தினம் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து நேற்று விமானத்தின் மூலம் அவரது உடல் சென்னை தி நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. நேற்று இரவு 10 மணி வரை திரை பிரபலங்களும் பொதுமக்களும் பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பின் பவதாரிணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணையபுரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று குடும்பத்தினர்களும் மற்ற உறவினர்களும் அஞ்சலி செலுத்திய பின் இறுதி சடங்குகள் நடைபெற்று வருகிறது அதை தொடர்ந்து பவதாரிணியின் உடல் சற்று நேரத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
தனது மென்மையான குரலினால் மெய்சிலிர்க்க வைக்கும் பல பாடல்களை கொடுத்தவர் பவதாரிணி. இவரின் மறைவு திரை உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இவரின் மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினி, “இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது” என்று தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
“என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரணி இழப்பு எங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார் பாரதிராஜா.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பாடகர் யுகேந்திரன், “நான் இப்போது நியூசிலாந்தில் இருக்கிறேன். அதிகாலை 4 மணி அளவில் பவதாரிணியின் மறைவு செய்தியை நான் கேட்டதிலிருந்து எங்கள் இருவருக்குமான நினைவுகள் ஒவ்வொன்றும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இளையராஜா அவர்களை ராஜா மாமா என்று தான் அழைப்பேன். சிறுவயதில் அடிக்கடி அவர்களின் வீட்டுக்கு செல்வதுண்டு. நாங்கள் அனைவரும் சேர்ந்து கச்சேரிக்கு சென்று இருக்கிறோம் பாடல்கள் பாடி இருக்கிறோம். சமீபத்தில் நான் சென்னை வந்த பொழுது கூட பவதாரிணியை சந்திக்க நினைக்க அது முடியாமல் போனது. இப்போது அதை யோசித்துப் பார்க்கும்போது நான் அவரை சந்தித்து பேசி இருக்க வேண்டும் என்று எனக்கு வருத்தமாக உள்ளது. எனக்கும் பவதாரிணிக்கும் நிறைய நினைவுகள் இருக்கின்றன. குறிப்பாக ஒரு நிகழ்வு என்றால் ஊஞ்சலை என்ற படத்திற்காக நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு டூயட் பாடலை பாடினோம் அதுதான் நான் பாடிய முதல் டூயட். வெங்கட் பிரபு நடிப்பில் உருவான இந்த படம் வெளியாகவில்லை. ஆனால் அந்த பாடல் இப்போது spotifyயில் இருக்கிறது” என்று பேசி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
நடிகர் வடிவேலு, ” பவதாரிணியின் மறைவு செய்து கேட்டு கதறி அழுது விட்டேன்” என்று குரல் பதிவின் மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
நடிகர் பாக்யராஜ், “குழந்தைகளுக்கு விளையாட பொம்மை என்பது போல் கடவுளுக்கு விளையாட மனிதர்கள். அதனால்தான் இவ்வளவு திறமைகள் இருந்தும் சின்ன வயதிலேயே பவதாரிணி போன்றவர்களை கடவுள் சீக்கிரம் கூட்டி செல்கிறார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசியுள்ளார்.
நடிகர் சூரி, ” இந்த துயரம் என் தகப்பனுக்கும் நடக்கக்கூடாது. உலகத்தில் உள்ள பலரும் கஷ்டத்தில் இருக்கும்போது இளையராஜாவின் இசை ஆறுதலாக இருந்திருக்கிறது. ஆனால் இப்போது இளையராஜா கஷ்டத்தில் இருக்கும் போது அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை” என்று பவதாரிணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.