பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் இணைந்து கடந்த 2013 ஆம் ஆண்டு ராம் லீலா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பிறகு இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே பத்மாவத், 83 உள்ளிட்ட படங்களிலும் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்து வந்தார் தீபிகா படுகோன். அதன்படி ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்திலும், ஹிரித்திக் ரோஷன் உடன் இணைந்து ஃபைட்டர் படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக பிரபாஸ், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் கல்கி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த தீபிகா படுகோன், தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதேசமயம் தனக்கு செப்டம்பர் மாதத்தில் குழந்தை பிறக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதியினருக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தீபிகா படுகோனின் வளைகாப்பு நிகழ்ச்சி விரைவில் மிகப்பிரமாண்டமாக நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
- Advertisement -