தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர். அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தான் நடித்திருந்த கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். தனுஷ் ஏற்கனவே 2017 ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ப. பாண்டி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதே சமயம் தனது 51வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். தனுஷின் 51வது படத்தின் படப்பிடிப்புகள் சில தினங்களுக்கு முன்பாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அந்த வகையில் தனுஷ் 51 படமானது திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி பகுதியில் நடைபெற்றது.
அதன் பிறகு படப்பிடிப்பினால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், இதனால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் படப்பிடிப்பிற்கு தந்த அனுமதியை திருப்பதி காவல்துறையினர் ரத்து செய்தனர். இந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பினை மும்பையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே D51 படமானது மும்பையில் உள்ள தாராவியை மையமாக வைத்து உருவாகும் கதை என ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. அதனால் இந்த படத்திற்கு தாராவி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.