தனுஷ் நடிப்பில் உருவாகும் குபேரா படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி ராயன் எனும் திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை தனுஷே இயக்கியிருந்தார். இதற்கிடையில் தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார். தனுஷின் 51வது படமான இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இதில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. எனவே இதன் படப்பிடிப்புகள் ஐதராபாத், மும்பை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் சேகர் கம்முலா, எடுத்த வரையிலான படத்தினை போட்டு பார்த்திருக்கிறார். இன்னும் சில காட்சிகள் நினைத்தால் படம் நன்றாக இருக்கும் என முடிவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக தனுஷிடம் பேசியபோது தனுஷ் பத்து நாட்கள் கால் சீட் தருவதாக கூறியிருக்கிறார். ஆகையினால் விரைவில் குபேரா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருக்கிறது. படத்தினை பான் அளவில் வெளியிட படக் குழுவினர் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.