இயக்குனர் மிஸ்கின் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராவார். அந்த வகையில் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, பிசாசு என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிசாசு 2, ட்ரெயின் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையில் மிஸ்கின் ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் வெளியான வணங்கான் திரைப்படத்தில் நீதிபதியாக நடித்திருந்தார். அடுத்தது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மிஸ்கின். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மிஸ்கின், “நான் கெட்ட வார்த்தை பேசப்போவதில்லை. நான் ஒரு வருடம் எந்த ஒரு படம் நிகழ்ச்சிக்கும் வர வேண்டாம் என நினைத்தேன். ஆனால் ஏஜிஎஸ் நிறுவனத்திற்காக தான் இப்போது வந்தேன்” என்று சொன்னார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர், “பிரதீப் ஒரு புருஸ்லீ. இன்னும் சண்டை படங்களில் நடிக்க வில்லை அநேகமாக என்னுடைய படத்தில் நடிப்பார் என நினைக்கிறேன். இயக்குனரின் நட்பு, உறவு உள்ள நடிகர் பிரதீப் தான். பல நடிகர்களுக்கு ஈகோ இருக்கும். ஆனால் பிரதீப் அப்படி இல்லை. நுனி நாக்கு ஆங்கிலம் இல்லாமல், நூறு பேர் பின்னாடி நடந்த வருகிற நாயகனாக இல்லாமல், பந்தா இல்லாத குறிப்பாக விஜய் சேதுபதிக்கு பிறகு பக்குவமான நடிகர் என்றால் பிரதீப் தான், அப்படி பட்ட நடிகர். ஒரு பெரிய ஹீரோ பட விழாவில் இதுபோன்று பேசினால் நான் அவரின் அடுத்த படத்திற்காக பேசுகிறேன் என்பார்கள். ஆனால் பிரதீப், நீ ஒரு படம் கூட எனக்கு தர வேண்டாம்” என்றார்.
அடுத்தது சமீபத்தில் வெளியான Bad Girl படத்தின் முன்னோட்டம் பற்றி பேசிய மிஷ்கின், ஒரு படத்தின் முன்னோட்டம் வந்ததாலே அப்படத்தை தடை செய்வது ஏற்றுகொள்ள கூடியதாக இல்லை. நாம் ஒன்று சேர்ந்து எதை தவிர்க்க வேண்டுமோ அதை தவிர்த்து கருணையோடு அப்பெண் குழந்தையின் படைப்பை வெளிக்கொண்டு வரவேண்டும். எப்பொழுதாவது தான் சினிமாவில் ஒரு பெண் இயக்குனர் வருகிறார். எனவே ஒன்று கூடி அவர்களை ஆதரிக்க வேண்டும். மேடையில் படக்குழுவினரின் புகைப்படத்தை காட்டி மிஷ்கினிடம் கருத்துகளை கேட்ட நிலையில் இறுதியாக அவருடைய படத்தை காட்சிப்படுத்தியதும், விரைவில் சினிமாவை விட்டு வெளியேறுகிற இயக்குனர் நான்தான்” என்றார்.