Homeசெய்திகள்சினிமாதெலுங்கு பக்கம் திரும்பும் நெல்சன்... புஷ்பா பட நடிகருடன் கூட்டணி...

தெலுங்கு பக்கம் திரும்பும் நெல்சன்… புஷ்பா பட நடிகருடன் கூட்டணி…

-

நடிகர் ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக தெலுங்கு பக்கம் திரும்ப உள்ளார்.

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். கோலமாவு கோகிலா படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. வசூலையும் வாரிக்குவித்தது. டாக்டப் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். ஆனால், பீஸ்ட் கலவையான விமர்சனம் பெற்றது.

அண்மையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினிகாந்த், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம், 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் தற்போது தெலுங்கு பக்கம் செல்வதாக தெரிகிறது. டோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜூனை வைத்து புதிய படம் இயக்குவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும், புஷ்பா 2-ம் பாகத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜூன் அடுத்ததாக த்ரிவிக்ரம் படத்தில் நடிக்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து நெல்சனுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ