இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் படத்தின் மூலம் அறிமுகமாகி அதைத்தொடர்ந்து முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டவர். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே இயக்குனர் சங்கர், இழந்த தனது வெற்றியை கேம் சேஞ்சர் படத்தின் மூலம் திரும்பப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிகபிரம்மாண்டமாகவும் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் நாளை (ஜனவரி 10) தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.
அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராம்சரண், எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சுனில், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் சங்கர் கேம் சேஞ்சர் படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது, “இந்தப் படத்தை நான் நம்புகிறேன். இது நன்றாக எடிட் செய்யப்பட்ட படம். எந்த ஒரு பின்னடைவும் இருக்காது. ஒரு நேர்மையான அரசு அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையிலான போர் தான் இந்த படத்தின் கதை. மேலும் அந்த நேர்மையான அரசு அதிகாரிக்கு பின்னணி கதை இருக்கிறது. அந்த கதை படத்தின் பாதியில் இணைக்கப்பட்டு இந்த படத்தை கிளைமாக்ஸுக்கு கொண்டு செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -