டான் பட இயக்குனரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் கசிந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி, மதராஸி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் வெங்கட் பிரபு போன்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே கால்ஷீட் பிரச்சனை காரணமாக சிவகார்த்திகேயனின் 24 வது படத்திலிருந்து சிபி சக்கரவர்த்தி வெளியேறிவிட்டதாகவும் வேறொரு புதிய படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில் சிபி சக்கரவர்த்தி, தெலுங்கு நடிகர் நானியை இயக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.