ஏஐ தொழில் நுட்பம் என்பது மறைந்தவர்களின் உருவத்தை திரையில் கொண்டு வரவும் அவர்களின் குரலை மீட்டெடுக்கவும் பயன்படுகிறது. இன்றுள்ள சினிமாவில் மறைந்த நடிகர்கள் பலரை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உயிர்பிக்க செய்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் The Greatest Of All Time படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏ ஐ மூலம் உயிர்பிக்க செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. அதே சமயம் லால் சலாம் திரைப்படத்தில் இடம்பெற்ற திமிறி எழடா எனும் பாடலுக்காக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், பம்பா பாக்கியா மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இரு பிரபல பாடகர்களின் குரலை பயன்படுத்தியிருந்தார். இதனால் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்றார்.
இந்நிலையில் பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியனின் குரலை பயன்படுத்தியதற்காக பிரபல இசையமைப்பாளருக்கு எஸ் பி சரண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது பிரபல இசையமைப்பாளர் விவேக் சாகர் சமீபத்தில் நடந்த பேட்டியில் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் குரலை பயன்படுத்தி உள்ளதாக வெளிப்படையாக கூறியிருந்தார். ஆனால் அவர் எஸ் பி பாலசுப்ரமணியன் குடும்பத்தாரிடம் எந்த ஒரு அனுமதியும் பெறவில்லையாம். முறையான அனுமதி பெறாமலேயே அவரின் குரலை பயன்படுத்தியதற்காக எஸ் பி சரண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இசையமைப்பாளர் விவேக் சாகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், “எந்த ஒரு தொழில்நுட்பமும் மனித இனத்திற்கு பயன் அளிக்க வேண்டுமே தவிர அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் விதத்தில் இருக்கக் கூடாது. எஸ்பிபி யின் குரல் இந்த வகையில் பயன்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் எங்களிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படுவது தான் வேதனையான விஷயம். எனவே எனது தந்தையின் குரலை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.