இசைஞானி இளையராஜாவின் தம்பியும் பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரனின் இரண்டாவது மகன்தான் பிரேம்ஜி என்பது அனைவரும் அறிந்ததே. கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வரும் நிலையில் அவர் இயக்கிய சென்னை 600028, கோவா, சரோஜா, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பிரேம்ஜி. இவர் தமிழ் சினிமாவில் கார்த்தி, சிம்பு, விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதேசமயம் கடந்த ஆண்டு வெளியான சத்திய சோதனை என்ற திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து பெயர் பெற்றார். எப்போதுமே தன்னை முரட்டு சிங்கிள் என்று சொல்லிக் கொண்டிருந்த
பிரேம்ஜி கடந்த ஜூன் 9ஆம் தேதி இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெற்ற நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் மணமக்களை வாழ்த்தி சென்றனர். அதைத் தொடர்ந்து இருவரும் இணைந்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தனர். இந்நிலையில் பிரேம்ஜியின் மாமியார் ஷர்மிளா தனது மருமகனான பிரேம்ஜி குறித்து பேசி உள்ளார். “ஆரம்பத்தில் பிரேம்ஜியின் பழைய பேட்டிகளை பார்த்து எனது மகளை அவருக்கு கொடுக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் அவரிடம் பழகி பார்த்த பின்பு தான் பிரேம்ஜி தங்கமானவர் என்பதை உணர்ந்தேன். என் மகள் என்னை ஏதாவது வேலை செய்ய சொன்னால் கூட பெரியவர்களை ஏன் வேலை செய்ய சொல்கிறாய் என்று கோபப்படுவார். அவர் எல்லோரிடமும் மரியாதையாக நடந்து கொள்வதுதான் எனக்கு அவரிடம் பிடித்த விஷயமே” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -