சிவாஜி வீட்டில் தனக்கு பங்கு இல்லை எனவும் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரியும் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் ஈசன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜகஜால கில்லாடி திரைப்படத்தை தயாரித்திருந்தனர். எனவே இத்தயாரிப்பு பணிகளுக்காக தனபாக்கியம் என்டர்பிரைஸ் நிறுவனத்திடம் துஷ்யந்த், 30 சதவீத வட்டியுடன் ரூ 3.74 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த கடனை திரும்ப செலுத்தாததால் தனபாக்கியம் என்டர்பிரைஸ் நிறுவனம் துஷ்யத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திஇருந்தது.
இந்த வழக்கில் வட்டியுடன் ரூ 9.39 கோடியை திருப்பித் தருமாறும் ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு ஈசன் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி டி. ரவீந்திரன் என்பவரை மத்தியஸ்தராக உயர்நீதிமன்றம் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தது இந்த வழக்கு விசாரணையில் பலமுறை பதில் மனு தாக்கல் செய்ய சிவாஜியின் பேரன் துஷ்யந்த் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. உயர் நீதிமன்றமும் அவருக்கு அவகாசம் வழங்கி இருந்தது. ஆனால் இதுவரை துஷ்யந்த் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் மத்தியஸ்தரின் தீர்ப்பை இறுதி செய்து சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று (மார்ச் 5) சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், சிவாஜியின் வீட்டில் தனக்கும் தனது மகனுக்கும் பங்கு இல்லாத நிலையில் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனதில் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் பிரபுவிற்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.