நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக ரத்னம் எனும் திரைப்படம் வெளியானது. ஹரி இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் விஷால், துப்பறிவாளன் 2 திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியானது. அதன்படி நடிகர் விஷாலும் இதனை உறுதி செய்திருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படாமல் இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் விஷால், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து மார்க் ஆண்டனி 2 திரைப்படத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் விஷாலின் லைன் அப்பில் இரும்புத்திரை 2 திரைப்படமும் இணைந்துள்ளது.
அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு விஷால், அர்ஜுன், சமந்தா ஆகியோரின் கூட்டணியில் இரும்புத்திரை எனும் திரைப்படம் வெளியானது. சர்தார் பட இயக்குனர் பிஎஸ் மித்ரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். விறுவிறுப்பான திரைக்கதையில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் பி எஸ் மித்ரன், சர்தார் 2 படத்தை முடித்துவிட்டு இரும்புத்திரை 2 திரைப்படத்தை கையில் எடுக்க உள்ளாராம். இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் விஷால் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.