நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியுடனான திருமண உறவை முறித்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து ஜெயம் ரவி பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்தன.
அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார் ஜெயம் ரவி. இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தனது மாமியார் சுஜாதா விஜயகுமாரின் பல படங்களில் நடித்து வந்தார். மேலும் தனது மனைவி குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு வந்தார். இவ்வாறு சுமூகமாக சென்று கொண்டிருந்த ஜெயம் ரவி – ஆர்த்தி வாழ்வில் திடீரென பூகம்பம் கிளம்பியது. ஒரு சில காரணங்களால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட தற்போது அது பிரிவில் வந்து முடிந்துள்ளது. எனவே ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களை கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும் திரை இல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் பத்திரிகை, ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நான் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நீண்ட கால யோசனை, பல பரிசீலனைகளுக்கு பிறகு எனது மனைவி ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்.
Grateful for your love and understanding.
Jayam Ravi pic.twitter.com/FNRGf6OOo8
— Jayam Ravi (@actor_jayamravi) September 9, 2024
இந்த முடிவு மிகவும் எளிதாக எடுக்கப்பட்டது கிடையாது. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல் வாழ்விற்காக எடுக்கப்பட்டது தான். இந்நேரத்தில் எனது பணி உரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இம்முடிவு எனது சொந்த முடிவாகும். இது என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாக இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கும் மிகவும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.