இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். அதைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் ‘ரெட்ரோ’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணனின் இசையிலும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவியிலும் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து சமீபத்தில் தான் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. மேலும் இந்த படமானது 2025 கோடையில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் தமிழ் நடிகர் ஹரிஷ் கல்யாணம் ஆகியோர் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.