நடிகை கீர்த்தி சுரேஷ், சமந்தா குறித்து பேசி உள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி பேபி ஜான் திரைப்படம் வெளியானது. அட்லீ தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் தெறி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அட்லீ இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இந்தி ரீமேக் தான் பேபி ஜான். இந்த படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகை கீர்த்தி சுரேஷ், தெறி படத்தில் நடித்திருந்த சமந்தாவின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெறி படத்தில் சமந்தாவின் நடிப்பு எப்படி பேசப்பட்டதோ அதேபோல் பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய கீர்த்தி சுரேஷ், “என்னை பேபி ஜான் படத்திற்கு சமந்தா தான் பரிந்துரைத்தார். இதை வருண் தவான் என்னிடம் சொன்னார். தெறி படத்தில் நடித்த சமந்தாவின் கேரக்டரில் நடிக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரிந்ததும் மிகவும் பயமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.