கடந்த 2017 ஆம் ஆண்டு பாரதிராஜா மற்றும் விதார்த் நடிப்பில் குரங்கு பொம்மை எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்த திரைப்படம் தான் மகாராஜா. இந்த படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. விஜய் சேதுபதியின் நடிப்பும் நித்திலன் சாமிநாதனின் திரைக்கதை எழுதிய விதமும் அதை எடுத்துச் சென்ற கோணமும் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் தற்போது ஓடிடியிலும் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நித்திலன் சாமிநாதனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவர் இயக்க இருக்கும் மூன்றாவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவலும் கசிந்துள்ளது. மேலும் ஏற்கனவே நித்திலன் சாமிநாதன், நயன்தாராவை இயக்கப் போவதாகவும் அது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இருக்கும் எனவும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.