நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் ஒரு தயாரிப்பாளராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார். அதேசமயம் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே பெயரும் புகழையும் பெற்றார். அடுத்தது தனது 50வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார் தனுஷ். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதன் பின்னர் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார் தனுஷ். அந்த வகையில் ஏற்கனவே இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில் பவிஷ், அனிகா சுரேந்திரன் ஆகியோரின் நடிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து, இந்த படத்தில் இருந்து ‘கோல்டன் ஸ்பேரோ’ எனும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் போஸ்டர்களும் வெளியாகி வந்தன. இந்நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமானது 2025 பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் வெளியீட்டை 2025 பிப்ரவரி மாதம் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.