வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் வைபவ், முனிஷ்காந்த், ரோபோ சங்கர், பாண்டியராஜன், பார்வதி நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இன்று (டிசம்பர் 15 ) வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் டி எஸ் ஆர் நிறுவனத்திடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தும் வரை ஆலம்பனா படத்தை திரையிடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஆலம்பனா படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்று என்ற தகவலை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அறிவித்த தேதியில் படத்தை வெளியிட முழு அர்ப்பணிப்புடன் நாங்கள் முயற்சித்த நிலையில் எதிர்பாராத சில சூழ்நிலைகளால் படத்தை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆலம்பனா திரைப்படமானது குழந்தைகள் மற்றும் குடும்பங்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் என்பதால் சிறந்த அனுபவத்தை வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதனால் சுவாரசியங்கள் நிறைந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் ஆலம்பனா படத்தின் ரிலீஸ் பொருத்தமான தேதியில் அறிவிப்போம். இத்தகைய தவிர்க்க முடியாத சூழலினால் அனைவருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். உங்கள் புரிதலும் ஆதரவும் எப்போதும் தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.