பிரபாஸின் ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரபாஸ், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அதன் பின்னர் இவர் தொடர்ந்து பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தி ராஜாசாப், கல்கி 2898AD 2, சலார் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் அர்ஜுன் ரெட்டி, அனிமல் படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். அதன்படி இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறார் எனவும், இப்படத்தில் சைப் அலிகான், கரீனா கபூர் ஆகியோர் நெகட்டிவ் ரோலில் நடிக்கப் போகிறார்கள் எனவும் தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படமானது 2025 மே மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் ஸ்பிரிட் படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லையாம். ஏனென்றால் ஸ்பிரிட் திரைப்படத்தை வழக்கமான போலீஸ் திரில்லர் கதையாக மட்டும் அல்லாமல் புதுமையான ஒரு கதையாக கொடுக்க முயற்சி செய்து வருகிறாராம் சந்தீப் ரெட்டி. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர்களின் தேர்வு நடந்து வருவதாகவும், சந்தீப் ரெட்டி வங்கா இந்த படத்தின் படப்பிடிப்பை 2025 செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.